பரமத்திவேலூர், ஜன.31: பரமத்திவேலூர் பகுதி விவசாயத்தின் நீர் ஆதாரமாக விளங்குவது ராஜவாய்க்கால் மற்றும் அதனைத் தொடர்ந்த பொய்யேரி, குமராபாளையம், மோகனூர் வாய்க்கால்களாகும். இந்த வாய்க்கால்களை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாய்க்கால்களை புனரமைப்பு செய்து நவீன மயமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாய்க்கால்களை புனரமைத்து நவீனமயமாக்குவதற்காக 184 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் வாய்க்கால்களின் முதல் கட்ட பணியை தொடங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், வாய்க்கால்களில் தண்ணீரை நிறுத்தி பணியை தொடங்குவது குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதன்படி எதிர்வரும் மார்ச் 1ம் தேதி வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி ஜூலை 1ம் தேதி மீண்டும் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவது என முடிவு செய்யப்பட்டது. வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறது.