வேலூர், ஜன.29: வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள அரசு நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் நடந்த மாணவர் பரிமாற்றம் நிகழ்ச்சியில் காகிதப்பட்டறை நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 40 மாணவர்கள் பங்கேற்றனர். வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் மாணவர் பரிமாற்றம் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில், மாணவர்கள் தங்களது பள்ளிகளில் இருந்து மற்றொரு பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ளுதல், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துதல், வரலாற்று நினைவிடங்களை கண்டு ரசிக்க பயணம் மேற்கொள்ளுதல் போன்றவைகள் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. அதன்படி, வேலூர் காகிதப்பட்டறை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 40 பேர் நேற்று தோட்டப்பாளையம் சர்வஜன நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் நடந்த மாணவர்கள் பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.