கோவை, ஜன. 28: தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை கமிஷனர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் வணிகர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உணவுத்துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில், உணவு கடைகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி, காந்திபுரம் பகுதியில் 13 கடைகள், ஆர்.எஸ்.புரம் பகுதியில் 17 கடைகள், சிங்காநல்லூர் பகுதியில் 42 கடைகள், சூலூர், நீலாம்பூர், தென்னம்பாளையம் பகுதிகளில் 40 கடைகள் என மொத்தம் 165 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், 50 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட சுமார் 34.89 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.66 ஆயிரம். மேலும், முதல் முறை குற்றத்திற்கான அபராத தொகையாக மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.