நாகர்கோவில், ஜன.28: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ம் ஆண்டின் ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் இதில் 50 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகள் புனிதபயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டன் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. www.bcmbcmw.tn.gov.in என்றஇணையதள முகவரியில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்பெறலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு 28.02.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.