தென்தாமரைகுளம், ஜன.28: அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்குட்பட்ட கரும்பாட்டூர், சாமிதோப்பு, வடக்கு தாமரைகுளம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளுக்கான முதல் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடந்த இக்கூட்டம் மிகவும் காரசாரமாய் நடைபெற்றது. சாமிதோப்பு கிராம சபை கூட்டம் செட்டிவிளை நூலகம் முன்பு ஊர் தலைவர் மதிவாணன் தலைமையிலும், வடக்கு தாமரைகுளம் கிராமசபை கூட்டம் அப்பகுதியின் சாஸ்தான்கோவில் முன்பாக ஊர்தலைவர் ஆறுமுகம்பிள்ளை தலைமையிலும் நடைபெற்றது. ஊராட்சி துணைதலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கரும்பாட்டூர் கிராம சபைகூட்டம் ஊர்தலைவர் தங்கமலர் சிவபெருமான் தலைமையில் கோட்டையடிபுதூர் பள்ளிவாசல் முன்பாக நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், கால்நடை மருத்துவர் ஆசீர் எட்வின், கிராம நிர்வாக அலுவலர் ஜெயகவிதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலாவதி, ஊராட்சி துணைத்தலைவர் தமிழரசி, ஊராட்சி செயலர் காளியப்பன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பால்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு மனுக்களை கொடுத்தனர்.