நாகர்கோவில், ஜன.28 : நாகர்கோவிலில் உள்ள தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களுக்கான புதிய அட்டைகள் மற்றும் புதுப்பிப்பு அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. போதிய பணியாளர்கள் இல்லாமல் அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். கட்டுமானம், ஆட்டோ ஓட்டுனர், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்பட 17 நல வாரியங்கள் தொழிலாளர் நல அலுவலகத்தின் கீழ் (சமூக பாதுகாப்பு திட்டம்) செயல்பட்டு வருகிறது. நாகர்கோவில் கோணத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் கல்வி உதவி தொகை, திருமண நிதி உதவி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த அலுவலகத்தில் தற்போது போதிய பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பிப்பு போன்ற பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன. தினமும் ஏராளமான தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகத்துக்கு வந்து பணி முடிவடையாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். இதுவரை 8 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலனை என்ற அடிப்படையில் உள்ளதாக கூறப்படுகிறது. நல வாரிய பணிகள் என்பது மிகவும் முக்கியமானதாகும். அடையாள அட்டை வழங்கினால் தான், தொடர்ந்து உதவி தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியும். எனவே தாமதம் இல்லாமல் நல வாரிய அட்டைகள் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.