தாம்பரம், ஜன.28: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு மான்கள், புலிகள், குரங்குகள், சிங்கம், கரடி, முதலை, யானை, ஓநாய், ஒட்டகச் சிவிங்கி உள்பட பல்வேறு பறவை இனங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் ஏராளமானவை உள்ளன. இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தினக்கூலி ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்கம், அரசு பணியாளர்கள் சங்கம் என 3 சங்கங்களும் ஒன்றிணைந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களில் முதுநிலை வரிசைப்படி பணி நிரந்தரம் செய்யவேண்டும் என நிர்வாகத்திடம், பெயர் பட்டியலுடன் கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பூங்கா நிர்வாகம், காலதாமதம் செய்துவிட்டு தற்போது தன்னிச்சையாக 54 பேருக்கு மட்டும் பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பட்டியலில் முதுநிலை இல்லாத பணியாளர்களின் பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.