திருக்கழுக்குன்றம், ஜன. 28: வட்டார கல்வி அலுவலர் சர்வாதிகாரிபோல் செயல்படுவதாக, பெண் ஆசிரியை புகார் தெரிவித்துள்ளர். திருக்கழுக்குன்றம் வட்டார கல்வி அலுவலர், சர்வாதிகாரி போல் செயல்படுவதாக பட்டதாரி ஆசிரியை மீராபாய், செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணி புரிந்தேன். என்னை திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் இருந்து உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு, திருக்கழுக்குன்றம் வட்டார கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்துள்ளார். இதே திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் என்னை விட இளையவர் உபரி ஆசிரியராக உள்ள நிலையில், மூத்தவரான என்னை பணியிட மாற்றம் செய்தது, பள்ளிக் கல்வித்துறை விதிகளுக்கு முரணானது. மேலும், எனக்கு மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது திருக்கழுக்குன்றம் வட்டார கல்வி அலுவலரின் பழிவாங்கும் படலத்தின் உச்சமாகவே உள்ளது. எனவே, எனது பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.