சிவகங்கை, ஜன. 24: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இவ்வழியே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. சிவகங்கையிலிருந்து சென்னை, திருச்சி, மன்னார்குடி, விருதுநகர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சுமார் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே செல்கின்றன. திருச்சி, ராமேஸ்வரம், காரைக்குடி, மானாமதுரை வழி செல்லும் ரயில்களில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், சிவகங்கை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக மன்னார்குடியில் இருந்து சிவகங்கை வழியே மானாமதுரைக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சிவகங்கைக்கு பகல் 12.30 மணிக்கு வரும். மீண்டும் மானாமதுரையில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு சிவகங்கைக்கு வந்து காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக இரவு 8 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்.