நாகர்கோவில், ஜன.24 : ஆசாரிபள்ளம் பன்றி வாய்க்காலில் கட்டப்பட்ட பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் இருந்து பெருஞ்செல்வவிளை, தோப்பூர், வீராணி, ஆளூர், சடையால்புதூர், மேலசங்கரன்குழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையில், பன்றி வாய்க்காலில் அமைக்கப்பட்டு இருந்த பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்த பாலத்தை விரிவுப்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உறுதி அளித்து இருந்தார். அதன்படி இந்த பாலத்தை விரிவுப்படுத்தி கட்ட அவர் நடவடிக்கை மேற்கொண்டார். பொதுப்பணித்துறை சார்பில் ₹98 லட்சம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இந்த பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின.