நாகர்கோவில், ஜன.24: நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பங்கேற்ற குடியரசு தினவிழா கொண்டாட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தது. நாடு முழுவதும் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கலந்துகொண்டு தேசியகொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் அவர்களது பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் தொடர்பான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை போன்று குடியரசு தினத்தன்று போலீஸ் அணி வகுப்பில் பங்கேற்கும் போலீசார் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று நாகர்கோவில் குடியரசு தினவிழா நடைபெறுகின்ற அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஊர்க்காவல் படையினரும் பங்கேற்றனர்.