சிவகங்கை, ஜன.23: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில் வாரந்தோறும் மனுக்கள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தாலுகா தலைநகரங்களில் தாலுகா அலுவலகங்கள், ஒன்றிய தலைநகரங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளது. தற்போது ஊராட்சி அளவில் அவ்வப்போது முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதியோர், விதவை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை, ரேசன் கார்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. மேலும் சிறப்பு முகாம்களும் ஒவ்வொரு தாலுகா அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு முகாம்களில் பொதுமக்களுடைய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டாலும் வாரந்தோறும் திங்கள் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர் கூட்டத்திற்கு ஏராளமான கிராமத்தினர் வருகின்றனர். காலை 10 மணியிலிருந்து மதியம் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது.
இதில் குடிநீர், சாலை வசதி, அரசு மற்றும் தனியார் இடம் ஆக்கிரமிப்பு, கால்வாய் ஆக்கிரமிப்பு, சுடுகாடு வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளுடன் பொதுமக்கள் மனு அளிக்கின்றனர்.