நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் சிறுமியை அடித்து, கொடுமைப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்

கடலூர், ஜன. 23: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த காதல் தம்பதி கருணாகரன்- புவனேஸ்வரி. டான்ஸ் மாஸ்டர்களான இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 13 வருடங்களுக்கு முன் கருணாகரன் மனைவியை விட்டு பிரிந்து சென்றார். தற்பொழுது எங்கே இருக்கிறார் என்ற தகவல் இல்லை. புவனேஸ்வரி நடன பயிற்சி மற்றும் நடன நிகழ்ச்சிகளின் மூலம் தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவர் 16 வயது சிறுமி. சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று காணாமல் போய்விடுவார். பின்னர் தேடி கண்டுபிடித்து அழைத்து வருவார்கள்.  

 கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இவர் ஒரு மாதத்திற்கு பின்பு கர்ப்பிணியாக மீட்கப்பட்டார். சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து தற்போது இரண்டு வயது ஆகிறது. அந்த குழந்தையையும், புவனேஸ்வரியும், அவரின் உறவினர் அனு என்பவரும் தங்கள் பொறுப்பில் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் பொங்கலுக்கு முன்பாக சிறுமி அம்மா வீட்டிற்கு வந்தார். அம்மாவும் மகளை கண்ணீரோடு கட்டியணைத்து தன்னுடனே இருந்துவிடுமாறு கூறி பாசம் காட்டினார். இந்நிலையில் சிறுமி அம்மா வீட்டிலிருந்து திடீரென்று தன்னுடைய 2 வயது குழந்தையுடன் மீண்டும் மாயமானார். இதனால் பதறிப்போன தாயும் அனு என்பவரும் குழந்தையையும், சிறுமியையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். கடலூர் பகுதியில் கடந்த மூன்று நான்கு நாட்களாக அலைந்து இறுதியில் கடலூர் முதுநகர் பகுதியில்  உள்ள பள்ளிவாசல் அருகில் சிறுமியை குழந்தையோடு கண்டுபிடித்தனர். சிறுமி தலை முழுவதும் காயங்களோடு நினைவிழந்து காணப்பட்டாள்.    அக்கம் பக்கம் உள்ளவர்களிடம்  விசாரித்தபோது அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சி அளித்தது. கடந்த சில நாட்களாக குழந்தையுடன் இங்கு தான் சிறுமி படுத்து கிடப்பதாகவும், காலையில் ஒரு கும்பல் ஆட்டோவில் பெண்கள் சிலருடன் வந்து சிறுமியை ஏற்றிச்செல்வதாகவும் பின்பு மாலை வேளையில் மயங்கிய நிலையில் சிறுமியை கொண்டு வந்து விட்டு விட்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

போதை கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார் என்றும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயாரும், உறவினர்களும் கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரை ஏற்க மறுத்த போலீசார் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். அவர்களும் வாங்க மறுத்து மீண்டும் முதுநகர் காவல்நிலையத்திற்கே சென்று புகார் அளிக்குமாறு கூறி புகாரை பெற மறுத்தனர். இதனால் அலைக்கழிக்கப்பட்ட அவர்கள் கடைசியில் சமூக நலத்துறை அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.   சிறுமியின் தாயார் கூறுகையில், முதுநகர் போலீசார் மீண்டும் மனுவினை ஏற்க மறுத்துவிட்டனர்.  ஏன் பார்த்தீபனை தப்ப விட்டீர்கள் என்று எங்களையே கேள்வி கேட்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சையும் மனநல சிகிச்சையும் அளிக்க வேண்டும். அவரையும் அவரது குழந்தையையும் கொடூர கும்பலின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.  சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பார்த்திபன் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக எஸ்பிஐ நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார். 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: