பண்ருட்டி, ஜன. 22: பண்ருட்டி நகரில் சாலை ஆக்கிரமிப்புகளால் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தினம் தினம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரம் முக்கிய வியாபார ஸ்தலமாகும். இதில் கடலூர் மெயின்ரோடு, ராஜாஜி சாலை, காந்திரோடு, கும்பகோணம் ரோடு ஆகியவற்றில் சிறு மற்றும் கனரக வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நான்குமுனை சந்திப்பு ஆகிய இடங்களில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்படுகிறது. இதுபோல் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகள் செல்ல முடியாமல் போகிறது. குறிப்பாக கடலூர் சாலையில் நான்குமுனை சந்திப்பிலிருந்து பேருந்து நிலையம் வரை காலை முதலே இரு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அங்குள்ள வங்கி, ஏடிஎம், கடைகள், கிளினிக்குகளுக்கு கூட பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்து போலீசார் பலமுறை எச்சரித்தும்கூட ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவை நிறுத்தி சாலையை ஆக்கிரமித்துகொள்கின்றனர்.