திருப்புவனம், ஜன. 22: திருப்புவனம் வாரச்சந்தை பிரச்சனை தொடர்பாக நேற்று தமிழக அரசின் முதன்மை செயலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். திருப்புவனத்தை சுற்றிலும் 45 ஊராட்சிகளை சேர்ந்த 170க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் வாரம் தோறும் செவ்வாய் கிழமை திருப்புவனத்தில் நடைபெறும் காய்கறி மற்றும் கால்நடை சந்தையில் விளைவித்த பொருட்கள் மற்றும் ஆடு, கோழிகளை விற்பனை செய்துவிட்டு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். திருப்புவனத்தில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் வாரம்தோறும் சந்தை நடந்து வந்தது. இந்த இடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. சந்தை நாளன்று இருபுறமும் நடந்து வந்த வாரச்சந்தையால் விபத்து அபாயம் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்தாண்டு ஜுலை மாதம் சேதுபதி நகர் எதிரே உள்ள காலி இடத்தில் வாரச்சந்தை இடம் மாற்றப்பட்டு நடந்து வந்தது. பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி செய்து தரப்பட்டது.