வாலாஜாபாத், ஜன. 22: வாலாஜாபாத் அருகே நாயக்கன்பேட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஓட்டல் உணவு கழிவுகள் கொட்டுவதால், அதை சாப்பிட வரும் கால்நடைகளுக்குள் மோதல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள் படுகாயமடைகின்றனர். வாலாஜாபாத் - காஞ்சிபுரம் செல்லும் சாலையை ஒட்டி அய்யம்பேட்டை, ராஜம்பேட்டை, நாயக்கன் பேட்டை, ஏகனாம்பேட்டை, தாங்கி, வெண்குடி, கீழ்ஒட்டிவாக்கம் உபட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் தினமும் செங்கல்பட்டு, தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான கார், பைக், லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையை ஒட்டியுள்ள நாயக்கன்பேட்டை ஈஸ்வரன் கோயிலின் சிறிது தூரத்தில், சாலையை ஒட்டி குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதில் கோழி கழிவுகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் உணவு கழிவுகள் அனைத்தும் இங்கு கொட்டப்படுகின்றன.