ஜலகண்டாபுரம், ஜன.22: ஜலகண்டாபுரத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கிற்கு நேற்றிரவு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் 7வது வார்டு கம்போஸ்ட் ரோடு பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. இதில் நாள்தோறும் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள், டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டு கொட்டி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் அப்பகுதியில் மலைபோல் குவிந்துள்ளது. இந்நிலையில் குப்பைக்கிடங்கிற்கு மர்ம நபர்கள் நேற்றிரவு தீ வைத்துள்ளனர். மேலும் காற்று பலமாக வீசியதில் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்ததுடன், கிடங்கை சுற்றிலும் பரவியது.