நாகை, ஜன.21: ஒருங்கிணைந்த சம்ஹார சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நாகை புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளிக்கு ஆழியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வருகை தந்து களப்பணியில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த சம்ஹார சிக்ஷா அபியான் திட்டத்தின் படி கிராமப்புறங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் நகர பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் இணைந்து களப்பணியில் பல நிகழ்வுகளை கற்றுக்கொள்வது ஆகும். இதன்படி நாகை புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளிக்கு நாகை அருகே ஆழியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் நேற்று வருகை தந்தனர். இவர்களுடன் ஆசிரியர்கள் சிவக்குமார், பெரியநாயகி ஆகியோர் வந்தனர். புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி வரவேற்றார். தாளாளர் டேவிட்செல்வகுமார் களப்பணி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். சமூக அறிவியல் பாட ஆசிரியர் ஆரோக்கிய சுந்தரம் ஸ்மார்ட் வகுப்பறையில் பாடம் கற்பித்தார். ஆசிரியர் ஆரோக்கியசாமி சுகாதாரம் குறித்து பேசினார். இதை தொடர்ந்து மாணவர்கள் நாகை துறைமுகம், கடற்கரை, கலங்கரை விளக்கம் ஆகிய இடங்களுக்கு சென்றனர். கலங்கரை விளக்க நிர்வாக அதிகாரி சின்னசாமி கலங்கரை விளக்கம் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் எடுத்து கூறினார். ஆசிரியர் அன்னலட்சுமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாஜாமொய்தீன், ஆசிரிய பயிற்றுநர் சத்தியநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.