பண்ருட்டி, ஜன. 21: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நேற்று அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள், பொதுமக்கள் தவிப்புக்கு ஆளானார்கள். இதையடுத்து தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் விடுமுறை மற்றும் அரசு விடுமுறை என மொத்தம் 8 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. மேலும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ, மாணவிகளும் நேற்று பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு வந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் கடலூர் செல்லும் அரசு டவுன் பஸ் எண் 17 தினமும் காலையில் புறப்படும். அதேபோல் பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் செல்லும் 2ம் எண் கொண்ட டவுன் பஸ்சும் காலையில் புறப்படும்.