நாகர்கோவில், ஜன.21 : குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப வினியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால், இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 11ம், டிரைவர் பணியிடங்கள் 3ம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக கல்வி தகுதி 8ம் வகுப்பு என நிர்ணயம் செய்யப்பட்டு விண்ணப்ப வினியோகம் நடக்கிறது. வருகிற 31ம்தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகும். நாகர்கோவிலில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 12 கிளைகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து இருந்தனர். கல்வி தகுதி 8ம் வகுப்பு என இருந்தாலும் கூட, பட்டதாரிகள் தான் அதிகம் பேர் விண்ணப்பங்களை வாங்கி சமர்ப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று திடீரென மத்திய கூட்டுறவு வங்கி தலைைம அலுவலகம் உள்பட சில இடங்களில் விண்ணப்ப வினியோகம் நடக்கவில்லை. இதனால் விண்ணப்பம் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். விண்ணப்பம் தீர்ந்து விட்டதாகவும், இடையில் பொங்கல் விடுமுறை இருந்ததால் விண்ணப்பம் வர வில்லை என்றும் கூறினர். இந்த பணியிடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதிகம் பேர் விண்ணப்பங்களை வாங்கி கடைசியில் இடம் கிடைக்காமல் ஏமாறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், விண்ணப்ப வினியோகத்தை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. நேரடியாக விண்ணப்பங்களை வினியோகம் செய்யாமல் ஆன்லைனில் வெளியிட்டு விண்ணப்பங்களை டவுன் லோடு செய்ய கூறினால், பிரச்சினை இல்லாமல் இருந்திருக்கும் என்றும் இளைஞர்கள் கூறினர்.