சீரமைக்க வலியுறுத்தல்
காளையார்கோவில், ஜன.20: காளையார்கோவிலில் உள்ள ஒழுகுளத்துக்கண்மாயில் அப்பகுதிகளில் உள்ள குப்பைகளை கொட்டியும் கழிவுநீரை விட்டும் மினி கூவம் ஆறு போல் மாறிவருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
காளையார்கோவிலில் உள்ள ஒழுகுளத்துக்கண்மாய் சுமார் 52 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரியகண்மாய் ஆகும். இக்கண்மாய் நீர்பாசனம் மூலம் சில வருடங்களுக்கு முன்னால் 40 ஏக்கருக்கும் மேல் நெல் விவசாயம் செய்து வந்தனர். தற்போது விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனையாக மாறிட்டதாலும் கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து சுற்றியுள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
மேலும் கண்மாய்க்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் அடைபட்டு நீர் வரத்துச் சுத்தமாக நின்றுபோனது. கண்மாயைச் சுற்றி கருவேல மரங்கள் அடர்த்தியாக இருப்பதால் இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் வீடுகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள். மேலும் இது போன்று காளையார்கோவிலைச் சுற்றி 13 கண்மாய்கள், 6 குளங்கள் உள்ளன. இவை அனைத்திலும் குப்பை, கழிவுநீர் மற்றும் கருவேல மரங்கள் நிறைந்துள்ளன. வரத்து கால்வாய் ஆக்கரிமிப்பை அகற்றி கருவேல மரங்களை அழித்து மழை நீர் செல்லும் வழித்தடம் அமைக்க வேண்டும். இதற்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.