சேலம், ஜன.20: சேலம் மாவட்ட விவசாயிகள் நடப்பாண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் மாவட்டத்தில் உள்ள 20 வட்டாரங்களிலும், நடப்பாண்டில் ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம், அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடட் என்ற முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு தோல்வியுறுதல், மகசூல் இழப்பு மற்றும் வறட்சியினால் இடைக்கால துன்பம் ஏற்படுதல் ஆகிய இனங்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட அலகு அடிப்படையில் விவசாயிகள் காப்பீடு பெற தகுதியுடைவர்கள். உள்ளூர் இடர்பாடுகள் மற்றும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு ஆகிய இனங்களுக்கு, தனிநபர் காப்பீடு பெற தகுதியுடையவர். உள்ளூர் இடர்பாடுகள் இனத்தில் பயிர் மூழ்குதல் ஆபத்து போன்றவை நெல் மற்றும் கரும்புக்கு பொருந்தாது.