கூடலூர், ஜன. 19: கூடலூர் வெட்டக்காடு பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ஏராளமான வாழைமரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. எனவே, இப்பகுதியில் விவசாயத்தை பாதுகாக்க வனப்பகுதியை ஒட்டி அகழிகள் அமைக்க வனத்துறையினர் முன் வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தேனி மாவட்டம், கூடலூர் வெட்டுக்காடு, கப்பாமடை, வேளாங்காடு ஆகிய குதிகளில் விவசாயிகள் வாழை, தென்னை பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர். வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த விளைநிலங்களில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைத்தனர்.ஆனால், தற்போது இந்த அகழி மண்மேவி கிடப்பதால் வனப்பகுதியிலிருந்து காட்டுப்பன்றி, மான், யானை போன்ற வனவிலங்குகள் வெளியேறி அடிக்கடி விளைநிலத்திற்குள் புகுந்து, விவசாய நிலத்தை நாசப்படுத்துகிறது.