திருச்சி, ஜன.13: திருச்சி அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவி மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அவர் ஊராட்சி அலுவலகத்தில் கணவருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி அடுத்த மணிகண்டம் ஒன்றியம், ஓலையூர் அருகே முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் சின்னதம்பி மனைவி ஜான்சிராணி. இந்நிலையில் இவரது ஊராட்சிக்குட்பட்ட துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையில் சாலை அமைக்கும் பணிக்காக திருமலைசமுத்திரம் குளத்தில் இருந்து மண் எடுத்து சென்றவர்களை அதிமுகவினர் தடுத்து கமிஷன் கேட்டதாக தெரிகிறது. இவர்களிடம் முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவி ஜான்சிராணி பேச்சுவார்த்தை நடத்தி தட்டிக்கேட்டுள்ளார்.