அருமனை, ஜன.13: அருமனை வட்டார அனைத்து இந்து சமுதாயமும், ஆலய நிர்வாகங்களும் இணைந்து நடத்திய 16வது பொங்கல் விழா 2 நாட்கள் நடந்தது. விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை பொங்கலிடும் நிகழ்ச்சி, மாலையில் அனைத்து இந்து சமுதாய பிரமுகர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஆகியன நடந்தது. இரண்டாவது நாளான நேற்று மாலை புண்ணியம் அய்யா நிழல் தாங்கலில் கலாசார ஊர்வலம் துவங்கியது. விழாக்குழு தலைவர் விஜயகுமார் தலைமையில் தொழிலதிபர் கமலன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். யானைகள், குதிரைகள், மாட்டு வண்டிகள், காவிக்கொடிகள், முத்து குடைகள் அணிவகுக்க மயிலாட்டம், தெய்யம், கதகளி, மயிலாட்டம், அலங்கார ரதங்கள் உட்பட 500க்கு மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். சமயவகுப்பு மாணவிகளின் கலை நிகழ்சசிகளும் நடந்தது. ஊர்வலம் நெடியசாலை, பனிச்சவிளை, அருமனை சந்திப்பு வழியாக நெடுங்குளம் சந்திப்பில் நிறைவடைந்தது. ஊர்வலத்தை பார்க்க சாலையின் இரு பக்கமும் பெண்கள் உட்பட ஏராளம் பொதுமக்கள் குவிந்திருந்தனர். மாவட்ட எஸ்.பி(பொறுப்பு) ராஜ ராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொங்கல் விழா பொதுக்கூட்டம் நடந்தது.