பள்ளிபாளையம், ஜன.12: உறுப்பினர்கள் புறக்கணித்ததால், பாதரை கிராம ஊராட்சியில் நடைபெற இருந்த துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரை கிராம ஊராட்சியில் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் செங்கோட்டையனை விட, அதிமுக வேட்பாளர் கணேசன் 18 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். 6 உறுப்பினர்களை கொண்ட இந்த ஊராட்சியில் திமுகவின் பலம் 4 ஆகவும், அதிமுகவுக்கு 2 ஆகவும் இருந்தது. இந்நிலையில் திமுக உறுப்பினரை அதிமுகவினர் வளைத்து போட்டதால் துணைத்தலைவர் தேர்தலுக்கு இருதரப்பினரும் சம பலத்துடன் இருந்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் தனது வாக்கை பதிவு செய்தால் அதிமுகவினர் துணைத்தலைவர் பதவியை கைப்பற்ற திட்டமிட்டிருந்தனர்.