மேலூர், ஜன.10: மேலூர் நகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பொங்கல் பரிசு வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலூர் நகரில் உள்ள 27 வார்டுகள், 36 ஊராட்சிகள மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூராட்சி என நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு பொங்கல் பரிசு பொருட்களை நேற்று முதல் வழங்குவதாக அறிவித்தது. இதனால் நேற்று காலையில் ஆர்வத்துடன் மேலூர் நகர் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பொங்கல் பரிசுகள் யாருக்கும் வழங்க வில்லை. இன்று அல்லது நாளை வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கவே பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, நான்கு நாட்களுக்கு முன்பே பயனாளிகளுக்கு தேவையான பணம் வந்து விட்டது. அத்துடன் வழங்க வேண்டிய பொங்கல் பொருட்கள் பைகளில் கரும்புடன் தயாராகவே உள்ளது.