குமாரபாளையம், ஜன.9: பல ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த 3 மனநோயாளிகள் மீது கருணை கொண்ட அட்சயம் அமைப்பினர் அவர்களை சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்து காப்பகத்தில் சேர்த்தனர். தெருக்களில் யாசகம் பெற்று வாழ்வோர்களை மீட்டு அவர்களின் உடல் திறனுக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்றுத்தரும் சேவையில் அட்சயம் அமைப்பினர் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். யாசகம் பெறுவோரை தவிர மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது கருணை கொண்டு அவர்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியினை தற்போது மேற்கொண்டுள்ளனர். குமாரபாளையத்தில் பல வருடங்களாக குளிக்காமல் சுற்றி வரும் மனநோயாளியிடம் தொடர்ந்து பேசி, அவரை காப்பகத்தில் சேர்க்க ஒப்புதல் பெற்ற அட்சயம் அமைப்பினர், முதியவருக்கு முடிவெட்டி முகச்சவரம் செய்து, புத்தாடை அணிவித்து தர்மபுரி மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.