நாகை, ஜன.9: ஒருங்கிணைந்த சம்ஹார சிக்ஷா அபியான் திட்டத்தின்படி பள்ளி மாணவர்களுக்கான பரிமாற்றம் திட்டத்தின்கீழ் நாகையில் களப்பணி முகாம் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த சம்ஹார சிக்ஷா அபியான் திட்டத்தின்படி கிராமப்புறங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் நகர பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் இணைந்து களப்பணியில் பல நிகழ்வுகளை கற்றுக்கொள்வது ஆகும். இதன்படி நாகை அருகே குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து நேற்று நாகை ரயில்வே ஸ்டேசன் வந்தனர். அங்கு திருச்சியில் இருந்து நாகை வந்த ரயிலில் ஏறி ரயில் எவ்வாறு இயக்கப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷன்களுக்கு சிக்னல்கள் எவ்வாறு கிடைக்கிறது. தண்டவாளம் எவ்வாறு மாற்றம் செய்யப்படுகிறது என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொண்டனர். இதன் பின்னர் வங்கியின் செயல்பாடுகள், தபால் நிலையங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டனர்.