முன்விரோத தகராறில் முதியவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

வேதாரண்யம், ஜூன் 20: வேதாரண்யம் அருகே முன்விரோத தகராறில் முதியவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம்-2, பாப்புரெட்டிகுத்தகை பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (67). ஆயக்காரன்புலம் 2, செட்டியார்குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (52). இருவருக்குமிடையே முன்விரோதம் காரணமாக ஆயக்காரன்புலம் கடைவீதியில் சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கட்டிப்புரண்டு சண்டையிட்டவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், ஆயக்காரன்புலம் கட்டளைவீரன் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், முருகையன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. பலத்த தீக்காயமடைந்த முருகையன் வேதாரண்யம் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாஸ்கருக்கும் காயம் ஏற்பட்டதால் அவர், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாய்மேடு போலீசார், தீ வைக்கப்பட்ட முருகையன் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், பாஸ்கர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்விரோத தகராறில் முதியவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post முன்விரோத தகராறில் முதியவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: