திருப்பூர், ஜன. 9: திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், முதல் குடிநீர் திட்டத்தில் குடிநீர் சப்ளை நிறுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டங்கள் மூலம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து குடிநீர் பெற்று வழங்கப்படுகிறது. மூன்றாவது குடிநீர் திட்டத்தில், புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில், குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது, அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், நான்காம் குடிநீர் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் திட்டத்தில் 55 கி.மீ, தொலைவுக்கு 350 மி.மீ, விட்டமுள்ள குழாய் அமைத்து, மூன்று நீரேற்று நிலையங்கள் வழியாக குடிநீர் கொண்டு வந்து விநியோகிக்கப்படுகிறது. இதில் தினமும் 4.5 எம்.எல்.டி., அளவு குடிநீர் பெறப்படுகிறது. தற்போது நான்காம் திட்டத்தில், 1,500 மி.மீ, விட்டமுள்ள குழாய் பதித்து, தினமும் 165 எம்.எல்.டி., குடிநீர் வழங்கும் வகையில் பணி நடக்கிறது.