வாலாஜாபாத், ஜன. 9: வாலாஜாபாத் ஒன்றியம் கரூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் இருந்து ராஜகுளம் வரை செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான கார், பைக், ஆட்டோ, பஸ், லாரி உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பழமையான தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக மேற்கண்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் தென்னேரி செல்லும் கால்வாயில் கலக்கிறது. தற்போது, இந்த தரைப்பாலத்தில், ஆங்காங்கே சிதிலமடைந்து மையப் பகுதியில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றன. பொதுமக்களும் படுகாயம் அடைவது வாடிக்கையாவிட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் கரூர் கிராமத்தில் இருந்து ராஜகுளம் வரை செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான பைக் கார் உள்பட பல்வேறு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதுமட்டுமின்றி இந்த சாலை சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. இதனால், இந்த வழியை பயன்படுத்தி காஞ்சிபுரம் செல்லும் கார்களும், கனரக வாகனங்களும் நெரிசலில் சிக்காமல் சென்று வருகின்றன.