திருவள்ளூர், ஜன. 9: திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பரிசோதனை செய்து தரக்கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருவள்ளூர் நேதாஜி சாலையை சேர்ந்தவர் தமிழரசி (22). இவர் பட்டறைபெரும்புதூர் பகுதியை சேர்ந்த நவீன் (24) என்பவரை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அநன்யா (2) என்ற மகள் இருக்கிறாள். தமிழரசி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.இந்நிலையில், கடந்த ஓராண்டாக கணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தமிழரசிக்கும், நவீனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மிகுந்த மனவேதனையுடம் தமிழரசி இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மனவேதனை தாங்காமல் நேற்று முன்தினம் இரவு தமிழரசி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.