புதுக்கோட்டை,ஜன.8: தொழிற்சங்கங்கள் இன்று நடத்தும் போராட்டத்தின்போது, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தின் போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி கூறியதாவது: இன்றைய தினம் சில தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து வழித்தடங்கள், கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.