நாமக்கல், ஜன.8:நாமக்கல் மாவட்டத்தில் கைத்தறிகளில் நெய்ய வேண்டிய ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், மத்திய அரசால் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, கரை மற்றும் முந்தியுடன் கூடிய துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறியில் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டப்படி தண்டனைக்குரிய செயலாகும்.