திருவாரூர், ஜன. 7: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு செல்வி, சூரிய லெட்சுமி, சரஸ்வதி மற்றும் பானுமதி ஆகியோர் போட்டியிட்ட நிலையில் கடந்த 2ம்தேதி அம்மையப்பன் அரசு மேல்நிலை பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்படி ஊராட்சி வாக்கு பெட்டியை எண்ணுவதற்காக முகவர்களுக்கு காலை 10 மணி முதல் 11 மணி வரையில் நேரம் குறிப்பிடப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதற்காக முகவர்கள் அனைவரும் அங்கு காலை 9 மணியளவிலேயே காத்திருந்த நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த முகவர்கள் மட்டும் முன்கூட்டியே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு பிற வேட்பாளர்களின் முகவர்கள் இல்லாமல் வாக்கு பெட்டி திறக்கப்பட்டு எண்ணப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அப்போதே பிற வேட்பாளர்களின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து ஆளும் கட்சி ஆதரவு கொண்ட வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.