பொள்ளாச்சி, ஜன. 7:பொள்ளாச்சியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகள் நேற்று பதவியேற்று கொண்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களில், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்தது. இதில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சி தலைவர் பதவிக்கு 126 பேரும், 303 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 668 பேரும், 17 ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு 55 பேரும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 8 பேரும் என மொத்தம் 858 பேர் போட்டியிட்டனர். தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சி தலைவர் பதவிக்கு 71 பேரும், 210 வார்டு உறுப்பினர் பதவிக்கு 487 பேரும், 13 ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு 41 பேரும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும் போட்டியிட்டனர். ஆனைமலை ஒன்றியத்தில் 19 ஊராட்சி தலைவர் பதவிக்கு 50 பேரும், 156 வார்டு உறுப்பினர் பதவிக்கு 405 பேரும், 14 ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு 40 பேரும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 7 பேரும் போட்டியிட்டனர். இதேபோல், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சி தலைவர் பதவிக்கு 119 பேரும், 261 வார்டு உறுப்பினர் பதவிக்கு 641 பேரும், 17 ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு 65 பேரும், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும் போட்டியிட்டனர். இந்த நான்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பதவிகளுக்கும் மொத்தம் 2657 பேர் களமிறங்கினர். இதில், கோலார்பட்டி ஊராட்சி தலைவராக ஆறுச்சாமியும், எஸ்.பொன்னாபுரம் ஊராட்சி தலைவராக திலகவதியும். வடக்கு ஒன்றியத்தில் ஜமீன்முத்தூர் ஊராட்சி தலைவராக தவமணியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.