குளித்தலை, ஜன. 3: கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 5வது வார்டு மாவட்ட கவுன்சிலர், 10 ஒன்றிய கவுன்சிலர், 12 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி குளித்தலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தாமதமாக வாக்குப் பெட்டிகளை எடுத்து வந்ததால் வாக்குச்சீட்டுகளை பிரிக்கும் மையத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு முதல் சுற்று எண்ண ஆரம்பித்தனர். அதன்பிறகு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதில் 1வது வார்டில் திமுக வேட்பாளர் சந்திரமோகன் 2311 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 2வது வார்டில் திமுக வேட்பாளர் சாந்தா ஷீலா விஜயகுமார் 2609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் கே பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக தாமரைச்செல்வி, வதியம் ஊராட்சி மன்ற தலைவராக குணாளன், மணத்தட்டை ஊராட்சி மன்ற தலைவராக ஜெகநாதன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
