ஜனவரி 8ம் தேதி பொது வேலை நிறுத்தம் கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்க முடிவு

தஞ்சை, டிச. 31: ஜனவரி 8ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் தஞ்சை மாவட்டத்தில் 500 கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சையில் கட்டுமான தொழிலாளர் ஏஐடியூசி சங்க மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன் தலைமை வகித்தார். சங்க பொது செயலாளர் தில்லைவனம் நடந்த பணிகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தொழில் உற்பத்தி முடக்கம், நலவாரியங்கள் கலைக்கப்படுவது, முடக்கப்படுவது, நலவாரியத்தில் உள்ள சுமார் ரூ.40 ஆயிரம் கோடி நலநிதியை வேறு காரியங்களுக்கு பயன்படுத்துவது மற்றும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்யும் மத்திய பாஜ அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் 500 தொழிலாளர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா, வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு போக்குவரத்து சங்க தலைவர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: