ஈரோடு, டிச. 31: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள வ.உ.சி. பூங்காவில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகர பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக வ.உ.சி.பூங்கா உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா 10 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த பூங்காவில் சிறுவர்கள் ரயில், செயற்கை நீரூற்று, விலங்குகள் சரணாலயம் போன்றவைகள் இருந்தது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் வனவிலங்கு சரணாலயம் அடைக்கப்பட்டு விலங்குகள் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவர் ரயிலும் நிறுத்தப்பட்டது. மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழ அருகிலேயே சிறுவர் பூங்காவும் கட்டப்பட்டது. இந்த பூங்காக்கள் உரிய பராமரிப்பு செய்யாத நிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.6.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பூங்காவில் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த பூங்காவில் புல்வெளிகள், நடைபாதைகள், உணவு வழங்கும் பகுதி, குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகள், மலர் கண்காட்சி போன்ற பணிகள் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது காணும் பொங்கலுக்கு பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது வழக்கம்.