நாகர்கோவில், டிச.31 : இறச்சக்குளம் வாக்குசாவடியில் மூதாட்டியின் ஓட்டை வேறு நபர் பதிவு செய்ததாக கூறி, அடையாள மை வைத்த பின் ஓட்டளிக்க விடாமல் வெளியேற்றினர். குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, முஞ்சிறை, கிள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. காலையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆதார் அட்டை, பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஆதாரமாக கொண்டு வாக்காளர்கள் வாக்களித்தனர். அந்தந்த வாக்கு சாவடிகளில் உள்ள அலுவலர்கள், முகவர்கள் தங்களிடம் உள்ள பட்டியல் படி, வாக்காளர்களின் பெயர்களை சரிபார்த்து, மை வைத்த பின், வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என 4 பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர்.இறச்சக்குளம் ஊராட்சிக்கான 5 வாக்குசாவடிகள், அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு நேற்று காலை 8.30 மணியளவில் இருந்தே ஏராளமான ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இறச்சக்குளம் மேலத்தெருவை சேர்ந்த பேச்சியம்மாள் (68), என்பவரும் வாக்களிக்க வரிசையில் நின்றார். சுமார் 30 நிமிடம் வரை காத்திருந்து அவர் ஓட்டு போட வாக்கு சாவடிக்குள் சென்றார். அங்கிருந்த அலுவலர்கள் அவர் கொண்டு வந்திருந்த அடையாள அட்டையை சரிபார்த்து, பின் வாக்களிக்க உரிமை உண்டு என்ற அடிப்படையில் அவரது இடது கைவிரலில் மை வைக்கப்பட்டது.