உடன்குடி, டிச. 31: குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாளை (1ம் தேதி) 1008 பால்குட ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி இன்று (31ம் தேதி) மாலை 4மணிக்கு அரசரடி விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை, பிரசாதம் வழங்கல், அம்மனுக்கும் சுவாமிக்கும் மகா சங்கல்பம், அலங்கார மகா தீபாராதனை, 6.30 மணிக்கு ஏகாதசசஹஸ்ர நாமாவளி அர்ச்சனை, மகா சங்கல்பம், மகாத்மிக பாராயணம், மகா ருத்ரம், பஞ்சாட்சர நவாட்சரி மூலமந்திர யாகம், சிறப்பு அன்னதானம் வில்லிசை நடக்கிறது. நாளை (1ம் தேதி) காலை 6மணிக்கு மகாகணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, கஜ பூஜை, 6.30 மணிக்கு 108 கலச பூஜை, மகா தீபாராதனை, 6.45 மணிக்கு சிதம்பரேஸ்வரருக்கு மகா தீபாராதனை, 7மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெறும். இதைத்தொடர்ந்து 1008 பால்குட ஊர்வலம் துவங்குகிறது. ஊர்வலம் முக்கியவீதிகள் வழியே முத்தாரம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் அம்மனுக்கும் சுவாமிக்கும் 1008 பால்குட அபிஷேகம், 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம், மகா அபிஷேகம், வேத மந்திரம் முழங்க மகா அலங்கார மகா தீபாராதனை நடக்கிறது.