ஈரோடு, டிச. 30: ஈரோடு மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியத்திலும் 6,920 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான 170 வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், பெருந்துறை, சென்னிமலை, பவானிசாகர், அம்மாபேட்டை 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில், அம்மாபேட்டையில் 150 வாக்குச்சாவடி, அந்தியூரில் 134 வாக்குச்சவாடி, பவானி 133, பவானிசாகர் 112, சென்னிமலை 141, பெருந்துறை 129, சத்தியமங்கலம் 120 என 919 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு அலுவலர் உட்பட தலா ஏழு அல்லது எட்டு பணியாளர்கள் என 6,750 பேர் ஈடுபடுகின்றனர். இது தவிர, பதற்றமான வாக்குச்சாவடியாக கருதப்படும் 170 இடங்களில், 61 நுண் பார்வையாளர்கள், 49 வெப் கேமராவுடன் தலா ஒரு பணியாளரும், 80 இடங்களில் வீடியோகிராபர் மூலம் முழுமையான பதிவு என நடக்கிறது. தேர்தல் பணியில் மட்டும் 6,920 பேர் நேரடியாக ஈடுபடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையம் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வாக்குப்பெட்டிகளை அரசியல் கட்சியினர் பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்து செல்ல மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் தேர்தல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.