திருப்புத்தூர்,காரைக்குடி பகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பெரியகருப்பன் எம்எல்ஏ பிரசாரம்

திருப்புத்தூர், டிச.29: திருப்புத்தூர்,காரைக்குடி பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கோரி முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். திருப்புத்தூர் ஒன்றியம் இரணசிங்கபுரம், கோட்டையிருப்பு, சுண்ணாம்பிருப்பு, திருக்கோஷ்டியூர், காட்டம்பூர், வாணியம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் போட்டியிடும் திமுக ஒன்றிய செயலாளர் சண்முக வடிவேல், சகாதேவன், மதிவாணன் ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்தார்.

அப்போது பெரியகருப்பன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘9 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் சரியாக நடைபெறவில்லை. உள்ளாட்சியை பற்றி அதிமுக அரசு அக்கறைப்பட வில்லை. அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் அவர்கள் செய்த திட்டங்களை பற்றி கூறி கிராமங்களில் ஓட்டு கேட்க முடியவில்லை. இவர்கள் ஆட்சியில் நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக பல ஆயிரம் பேருக்கு வேலை இழப்புதான் ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசு தமிழ்நாட்டை பாஜகவின் காலடியில் வைத்துவிட்டு அவர்கள் சொல்லுவதை கேட்டு நடக்கிறது’என்றார். இதுபோல் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திய பகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டார்.

Related Stories: