திருமங்கலம், டிச.27: உச்சப்பட்டியை சேர்ந்தவர்களுக்கு 10 கி.மீ தூரம் தாண்டியுள்ள கட்ராம்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைத்து பூத் சிலிப் கொடுக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை திருமங்கலம் ஒன்றியம் பகுதிகளுக்கு டிச.30ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உச்சப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்கு நேற்று பூத்சிலீப் விநியோகம் செய்யப்பட்டது. மிகவும் ஆவலுடன் சிலிப்பை வாங்கிய பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த கிராமத்தை சேர்ந்த 150 பேருக்கும் மேலாக வாக்குச்சாவடி மையம் கட்ராம்பட்டி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என இருந்தது.