குடியாத்தம், டிச.27: குடியாத்தம் பகுதிகளில் கடந்தாண்டைவிட இந்தாண்டு குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது என்று ஆய்வு செய்த எஸ்பி பிரவேஷ்குமார் தெரிவித்தார். குடியாத்தம் போலீஸ் சப் டிவிஷனுக்கு உட்பட்ட குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வேலூர் எஸ்பி பிரவேஷ் குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் முக்கிய கோப்புகளை பார்வையிட்டு கையொப்பமிட்டார். குடியாத்தத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை, சிசிடிவி கேமரா பொருத்துதல், மக்களுக்கும் போலீசாருக்கும், நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் குடியாத்தம் நகர 36வது வார்டு, 6 வருவாய் கிராமங்களில் போலீஸ் சார்பில் குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கப்படுவது குறித்து குடியாத்தம் டிஎஸ்பி சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் கேட்டறிந்தார்.