சேலம், டிச.25: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளாமானோர் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா களை கட்டியுள்ளது. மாட்டுத் தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டன. இதேபோல், இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் வீடுகளிலும் ஸ்டார் தொங்க விடப்பட்டு, குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயத்தில் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப், பங்கு தந்தை ஜான் போஸ்கோ பால், ஆசீர்வாதம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில், ஆயிரக்கணக்கனோர் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.