கடலூர், டிச. 19: உள்ளாட்சி தேர்தல் பணிகளால் கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.கடலூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இது போல மணிலா, கரும்பு, உளுந்து, கம்பு, மக்காச்சோளம், பருத்தி ஆகியவையும் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரையில் பரவலாக கனமழை பெய்தது. இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பெரும்பாலான விவசாய நிலங்களில் ஒரு வாரம் வரையில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது. வடிவதற்கு அதிக நாட்கள் ஆனதால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டன.இது தொடர்பாக வேளாண்மைத்துறையினர் முதற்கட்ட கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளனர். அதில், மாவட்டத்தில் 2800 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்ததாகவும், தற்போது அது 2400 ஏக்கராக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், மணிலாவில் 1800 ஏக்கர் வரையில் தண்ணீரால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1400 ஏக்கராக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், சுமார் 2,900 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.