பந்தலூர், டிச. 19: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ சரகம் 4 பகுதியில் சாலை வசதி இல்லாததால், தொழிலாளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதில்லை என கூறி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அரசு தேயிலைத்தோட்டம் சேரங்கோடு டேன்டீ பத்து லைன் பகுதியில் 70க்கும் மேற்பட்ட டேன்டீ குடியிருப்புகளில் தொழிலாளர்கள் கடந்த 40 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் மண் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவயல் முதல் பத்து லைன் வரையுள்ள சுமார் 1,500 மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைத்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.