ஈரோடு, டிச.18: மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மானாவரியாகவும், நீர்பாசன முறையிலும் பயிரிடப்படுகிறது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் மானாவாரியில் அதிகமாக சாகுபடி செய்யப்படவில்லை. தற்போது, நீர்பாசன முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் டிசம்பர் முதல் அறுவடை செய்யப்படுகிறது. பல பகுதிகளில் தொடர் மழை காரணமாக முழு விளைச்சல் அடையாத பயிர்காய்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்பட்டு விட்டது. தற்போது முழு விளைச்சல் கண்ட பயிர்கள் அறுவடை துவங்கி விட்டது. வரும் மார்ச் வரை அறுவடை காலமாகும். கடந்த அக்டோபர் மாதம் வரை ஆலைகளுக்கு ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், மாவுச்சத்து அடிப்படையில் ஒரு பாயிண்ட் 380 வரையிலும், கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநில சிப்ஸ் தயாரிக்கும் வியாபாரிகள் டன் ஒன்றுக்கு 11,500 ரூபாய் வரையிலும் கொள்முதல் செய்தனர்.